வாக்குத்தத்தம்: 2019 மார்ச் 1 வெள்ளி

கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது (சங்.97:1)


நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய் (ஏசா. 54:14).
எண்ணாகமம் 15-17 | மாற்கு.8:1-21

ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 1 வெள்ளி

அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக (சங்.20:2).


“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (1பேது.3:12) இம்மாதத்திலும் பலத்த துருகமாகிய கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தவும் குறிப்பாக பிளஸ் டூ தேர்வு எழுதப்போகும் பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைத்து பிள்ளைகளும் சிறந்தவிதத்தில் தேர்வுகளை எழுதுவதற்கும் ஜெபிப்போம்.

உள்ளதைக் கொடு!

தியானம்: 2019 மார்ச் 1 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 14:14-21

“. . . இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்” (மத்.14:17-18).

“நான் சிறுவனாய் இருந்தபோது எனக்கு நன்றாக பாடவராது. சரியாகப் பாடவில்லையென்று அப்பாவின் கோபத்துக்கும் ஆளாகியதுண்டு. எப்போது என்னை என் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேனோ, அதன் பின்னர்தான் எனது பாடும் திறமையும் எனக்குள் வளர்ந்ததை உணர்ந்தேன்”. இப்படியாக ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நம்மிடம் உள்ளதை தேவனிடம் கொடுக்கும்போது தேவன் அதை விருத்தியடையச் செய்வார். ‘என்னாலே முடியாது. நான் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும், மந்தநாவும் உள்ளவன்’ என்று சொன்ன மோசேயைத் தேவன்விட்டு விட்டாரா? நான் உன் வாயோடே இருந்து நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்று வாக்களித்து அனுப்பினார். தனது திக்குவாயையும், மந்த நாவையும் மோசே தேவனிடம் ஒப்படைத்தபோது, அதைக் கொண்டே தேவன் பலத்த காரியங்களைச் செய்தார்.

இன்றைய தியானப்பகுதியில், ஏறக்குறைய ஐயாயிரம் பேர் பசியோடு இருக்கிறார்கள். அவர்களைப் போஷிக்கவேண்டிய தேவை இருந்தது. அவர்கள் மத்தியில் அப்போது இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மாத்திரமே. அச்சிறிய உணவுதான் தேவ ஆசீர்வாதத்தால் ஐயாயிரம் பேரின் வயிற்றையும் திருப்தியாக்கியது. அனைவரும் சாப்பிட்டுத் திருப்தியாகி, மிகுதியைப் பன்னிரண்டு கூடைகளிலும் சேர்த்தார்கள் என்று வாசிக்கிறோம்.

தேவன் ஆசீர்வாதத்தின் தேவன். அவர் நம்மை எல்லாவிதத்திலும் ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார். ஆனால் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் நமது பங்கைச் சரியாகச் செய்யவேண்டும். நமது வாழ்வு தேவாசீர்வாதங்களால் நிரம்பிட ஆசிக்கிறோமா? உங்களிடம் உள்ளது கொஞ்சமாயினும், அதை அப்படியே ஆண்டவரிடம் மனப்பூர்வமாய்க் கொடுங்கள். அவரே அதனை ஆசீர்வதித்துப் பெருகிடச் செய்வார். அப்போதுதான் அது மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும். “என்னால் எதுவும் முடியாது, என்னிடம் ஒன்றுமேயில்லை, நான் எவருக்குமே பிரயோஜனமற்றவன், நான் வாழ்ந்து என்ன பயன்” இவ்வாறான சிந்தனைகளுக்கு நாம் இடமளிக்கக்கூடாது. அப்படிப்பட்ட சிந்தனைகள் ஒரு விரக்தியான வாழ்வுக்குள் நம்மை வீழ்த்திப்போடும். அது பலவித வேதனையான விளைவுகளைக் கொண்டுவரும். ஆகவே, நம்மிடம் உள்ளது எதுவாயினும் அதை அப்படியே தேவகரத்தில் கொடுத்துவிடுவோமாக. அவர் அதை ஆசீர்வதிப்பார்.

“உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. …உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்” (நியா. 6:14).

ஜெபம்: ஆசீர்வதிக்கும் தேவனே, என்னிடம் உள்ளது சிறிதாயினும், அதை உள்ளபடியே உமக்காய்ச் செலவிட நான் ஆயத்தமாயிருக்கிறேன். அநேக ஆயிரம் ஆத்துமாக்கள் பிரயோஜனமடைய கிருபை செய்யும். ஆமென்.

கேடான இருதயம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யாத்திராகமம் 32: 1-35


மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க  தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள் (யாத்.32:6).


“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று எரேமியா தீர்க்கதரிசி உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமம் எரேமியாவின் கணிப்புக்கு அநேக சாட்சிகளைத் தருகிறது. இன்றைய செய்தித்தாட்களும் அதனையே எடுத்துரைக்கின்றன.

மனித இருதயம் எவ்வளவு கேடானது என்பதற்கு சீனாய் மலையில் இஸ்ரவேலரின் நன்றியற்ற தன்மை மிகச்சிறந்த ஓர் உதாரணம். தேவனுடைய ஜனங்கள் மலையின் கீழே முகாமிட்டிருந்த பொழுது மோசே மலையின் மேலே ஏறிச்சென்று தேவனுடைய நியமங்களைப் பெற்றுவந்தார். ஜனங்கள் தேவனுடைய பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு எல்லாரும் ஏகசத்தமாய் “கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று உத்தரவு சொன்னார்கள் (யாத்.24:3). மீண்டுமாக மோசே தேவ பர்வதத்தின்மீது ஏறிச்சென்றார். இம்முறை அவர் தேவனை ஆராதிக்கும் முறைகளுக்கான தேவனுடைய கட்டளைகளைப் பெற்றுவந்தார்.

இம்முறை மோசே மலையின் மீது தங்கிய காலம் அதிகமாய் இருந்தது. ஏறக்குறைய ஆறு வாரங்கள் கழிந்தன. மோசே திரும்பாததினால் மக்கள் பொறுமையிழந்து பயப்பட்டனர். தங்களுடைய தலைவனை இழந்துவிட்டோமா? உணவு இல்லாமல் மோசே மலையில் எவ்வாறு வாழ்வார்? தேவன் எங்கே? எகிப்திலிருந்து நடத்திவந்த அவர் மேக ஸ்தம்பமாக அம்மலையிலே இருந்தார். தேவன் தங்களை கைவிட்டு விட்டாரா என்றெல்லாம் அவர்கள் சந்தேகித்தனர்.

இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாச சோதனையை நேருக்கு நேராக எதிர் கொண்டனர். அதில் அவர்கள் மோசமான தோல்வியைத் தழுவினர். மோசே இஸ்ரவேலருடன் இருந்தவரையிலும் “தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க” அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். ஆனால் அவர் இல்லாததால் இஸ்ரவேலரின் விசுவாசமும் கரைந்துபோனது. அவர்களது இருதயத்தின் துன்மார்க்க தன்மை வெளிப்பட் டது.

இஸ்ரவேலர் மேகத்தில் முன்சென்று நடத்திய நித்திய தேவனைப்போல தங்களுக்கு தேவர்களை உண்டாக்கித் தருமாறு ஆரோனை நச்சரித்தனர். ஆரோன் அவர்களிடமிருந்த பொன்னாபரணங்களை கழற்றித் தரச்சொல்லி அதை உருக்கி ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கினான். மறுநாள் கர்த்தருக்குப் பண்டிகை என்றும் அறிவித்தான்.

புது பொம்மையைப் பெற்றுக்கொண்ட குழந்தையைப் போல இஸ்ரவேலர் மிகவும் உற்சாகமடைந்தனர். இரவு அவர்கள் சரியாக உறங்கவில்லை. “மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகன பலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்தார்கள்” (யாத்.32:6). பின்னர் அவர்கள் விளையாட ‘எழுந்திருந்தார்கள்’ என்று வேதாகமம் கூறியுள்ளது. இது அப்பாவித்தனத்தைக் குறிப்பிட்டாலும் அவர்கள் பாவமில்லாத விளையாட்டில் ஈடுபடவில்லை. அவர்கள் பாலியல் இச்சையைத் தூண்டும் செயல்களிலும் விக்கிரக ஆராதனைக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். விக்கிரக ஆராதனை முடிவில் விவரிக்கமுடியாத அருவருக்கத்தக்க களியாட்டில் கொண்டு போய்விடும்.

மோசேயும் யோசுவாவும் மலையிலிருந்து இறங்கி வந்தபொழுது மக்களின் குழப்பமான கூச்சலை யுத்தத்தின் இரைச்சல் என்று அனுமானித்தார். ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஆவேசமும் ஒழுக்கக் கேடானதுமான விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கண்டதும் மோசேக்கு சினமூண்டது. தனது கரங்களில் இருந்த கற்பலகைகளை கீழே போட்டு உடைத்தார்.

இஸ்ரவேலர் விழுந்துபோன நிலையை யாத்.32:25 நமக்கு நன்கு விளக்குகிறது. ஜனங்கள் விக்கிரகத்தை வணங்கி களியாட்டத்தில் ஈடுபட்டு ஒழுக்கக் கேடான நடனமாடி நிர்வாணமாயிருந்தனர். இது மோசேயை மாத்திரமல்லாமல் தேவனையும் அவமதித்த செயலாகும்.

தேவன் தெரிந்துகொண்ட மக்களின் இருதயத்தை சாத்தான் கெடுக்கும் அளவுக்கு எல்லையே இல்லை. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தாங்கள் பாவத்தில் விழாதபடிக்கு தங்களிடம் பெலனுண்டு என்று ஏமாந்துபோகக்கூடாது. பாவத்தில் ஈர்ப்புண்டு போகாதபடிக்கு தேவனுடைய ஆவியானவர்தாமே நம்முடைய கேடான இருதயத்தைத் தடுக்கவல்லவர். இந்த நாளிலும் நாம் “எங்களை சோதனைக்குட்படாதபடிக்கு தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்த ஜெபத்தை ஏறெடுப்போமா?

அதிகாலைப் பாடல்:

தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்;
என்னை சோதித்து என் சிந்தையை அறிந்து கொள்ளும்:
வேதனை உண்டாக்கும் வழி உண்டோ என்று பார்த்து
பாவத்திலிருந்து என்னைக் கழுவி விடுதலையாக்கிடுமே.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச் – ஏப்ரல் 2019)

[1]
தாங்கள் அனுப்பும் பத்திரிக்கை தவறாமல் கிடைக்கிறது. தியானங்கள் ஆசீர் வாதமாகவும் பத்திரிக்கை மிகவும் பிரயோஜனமாகவும் உள்ளது.

Mrs.Gunaselvi Malliga, Udumalpet.


[2]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ் எனக்கு வழிகாட்டியாகவும் ஆற்றி தேற்றுவதாக உள்ளது. நல்ல ஆலோசனைகளை ஏற்ற வேளையில் அதன்மூலம் பெறவும் ஆழமாக அறிந்து கொள்ளவும் உதவுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Rajasuganthi Issac, Chennai.


[3]
நான் புறமதத்திலிருந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழன் டிவியில் தற்செயலாக சத்தியவசன நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. கொடுக்கப்பட்ட செய்திகளும் வசனங்களும் தெளிவாகவும் நன்றாக மனதில் பதியும்படியாகவும் எடுத்துரைத்தது அதிக பயனுள்ளதாக இருந்தது. செய்திகுறிப்புகளை எடுத்துக்கொண்டேன். தொடர்ந்து உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Esther Panditha Ramabai, Chennai.


[4]
நான் சத்தியவசன ஊழியத்தின் பங்காளராக இருப்பது கர்த்தர் கொடுத்த பாக்கியம். அனுதினமும் கிறிஸ்துவுடன் பிரதியில் வேதத்தை ஓராண்டுக்குள் படித்து முடிக்கும் திட்டம் அருமையானது. 2018ஆம் ஆண்டு வேதத்தை வாசித்து முடிக்க கிருபை செய்த இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி பலி செலுத்துகிறேன். தியானங்கள் விசுவாசிகளுக்கு அனுதின மன்னாவைக் கொடுக்கிறது. கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்க பெலன் கொடுத்து வருகிறது. கர்த்தர்தாமே இந்த ஊழியங்களை ஆசீர்வதித்து அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட கிருபை செய்வாராக.

Mrs.Packiavathy Paulraj, Chennai.


[5]
Dear Brother, I am getting Anuthinamum Christhuvudan, Sathiya vasanam Sanchigai and they are of great inspiration to me. May God continue to bless your Ministry in different ways.

Mrs.Nalini Stephenson, Vellore.


[6]
அன்பு சகோதரருக்கு, தாங்கள் செய்யும் பத்திரிக்கை ஊழியங்களுக்கு மிக்க நன்றி. இரண்டு புத்தகங்களும் மிகுந்த பயனுள்ளதாய் உள்ளது.

Mr.G.Prabin, Reetapuram

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச் – ஏப்ரல் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2018 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

இம்மாதத்தில் தபசு நாட்களுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். லெந்து நாட்களில் நடைபெற உள்ள சிறப்புக்கூட்டங்களை பற்றிய விபரங்கள் 79ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வூழியத்தின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இவ்விதழில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் மார்ச் 1-5 தியானங்களையும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான தியானங்களையும் எழுதியுள்ளார்கள். ஏனைய தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நாம் வருடந் தோறும் அனுசரித்து கடந்துசெல்கிற பாராம்பரிய நாட்களாக இந்நாட்கள் இராமல் கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நம் வாழ்வின் அனுபவங்களாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதையே இத்தியானங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாச பங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்