ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 30 திங்கள்

எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்கு தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங்.59:16) இம்மாதத்திலும் நமது வாழ்வின் எல்லா ஏற்றதாழ்வுகளிலும், இன்பதுன்பமான எல்லா நேரங்களிலும் நம்மை தாங்கி அரவணைத்து நடத்திவந்த தேவனுடைய கிருபைகளை மகிழ்ச்சியோடு துதித்து தேவனை மகிமைப் படுத்துவோம்.

இந்த நாளிலிருந்து…

தியானம்: 2019 செப்டம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 33:12-17

..உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் (யாத். 33:15).

மோசே செய்த ஜெபங்கள் எல்லாவற்றிலும் முக்கியமான இரண்டு ஜெபங்கள் எவருடைய இருதயத்தையும் உடைக்கக்கூடிய ஜெபங்கள் எனலாம். ஒன்று, “தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருள்வீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” (யாத். 32:32) யாராவது இன்னொருவரின் நிமித்தம் தான் தள்ளப்பட்டுப் போவதை விரும்பு வார்களா? அடுத்தது, மேலே நாம் காண்கின்ற ஜெபம். “…இவ்விடத்திலிருந்து கொண்டு போகாதிரும்”. இது ஒரு உறுதியான ஜெபமாகும்! 1991ம் ஆண்டு, இதே ஜெபத்தை ஒரு சகோதரி செய்ததைக் கேட்டேன். ‘உமது சமுகம் என்னுடன் வராவிட்டால் இன்னுமொரு புதிய வருடத்திற்குள் என்னைக் கொண்டுபோகாதிரும்’ என்று அவள் ஜெபித்தாள். அதன் அர்த்தம் என்னவென்று கேட்டபோது, ‘தேவனுடைய சமுகம் மாத்திரம் என்னோடே வராவிட்டால், ஆண்டவர் இப்போதே என்னை எடுத்துக் கொள்ளட்டும்’ என்று வியாதிப்படுக்கையிலிருந்த அவள் சொன்னாள்.

பலத்த வல்லமையான காரியங்களைச் செய்யும்படி கர்த்தர் மோசேக்கு அதிகாரமும், கிருபையும், வல்லமையும் கொடுத்திருந்தார். அதற்காக மோசே தற்பெருமை கொள்ளவுமில்லை; தேவன் தந்த வல்லமையை அவருடைய வார்த்தைக்கு மாறாக அல்லது புறம்பாக பிரயோகிக்கவுமில்லை. என்ன இருந்தாலும் எப்போதும் தேவனுடைய சமுகத்தை நாடிய ஒரு உத்தம தலைவன்தான் மோசே. அப்படியானால், தேவ சமுகத்தின் பெறுமதி, அதன் அவசியம் எப்படிப்பட்டது? எப்பொழுதும் தேவனுடைய சமுகத்தையே நாடிய மோசேகூட கோபத்தினால் ஆத்திரத்தினால், தேவன் தன்னோடே கூட இருக்கிறார் என்பதை மறந்து, ‘மலையோடு பேசு, அது தண்ணீர் கொடுக்கும்’ என்று தேவன் கூறியதற்கு மாறாக மலையை அடித்ததால், அவர் கானானுக்குள் போகும் ஆசீர்வாதத்தை இழந்தது நமக்கெல்லாம் பெரிய எச்சரிக்கையாகவே இருக்கிறது.

நாம் எப்போது தேவசமுகத்திலிருந்து விலகுகிறோம் என்பதை சத்துரு எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறான். கர்த்தர் நம்மோடு இல்லாவிட்டால், நம்மை வீழ்த்த அவனுக்கு ஒரு இமைப்பொழுது போதும். கர்த்தரை விட்டுப் பின்வாங்கியபடியால் கர்த்தர் உங்களோடே இரார் என்று மோசே சொன்னதையும் கேளாமல் மலையேறிய இஸ்ரவேலர் முறியடிக்கப்பட்டதை மறக்கலாகாது (எண். 14:41-45). மோசே செய்த இந்த ஜெபம் இன்று நம்முடையதாக மாறுமா?

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள். அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள் (சங்.105:4).

ஜெபம்: ஆண்டவரே, சத்துருவின் கண்ணிகளுக்கு எங்களை விலக்கி என்றென்றும் உம்முடைய சமுகத்தில் வாழுகின்ற கிருபைளைத் தந்தருள ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 29 ஞாயிறு

உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சமானமானவர் யார்? (சங்.113:5) பரலோக தேவனை ஆராதிக்கும் இந்த பரிசுத்தமான ஓய்வு நாளில் திருச்சபைக்குள்ளே ஏகசிந்தை ஏகமனது காணப்படவும் புற இன மக்களுக்கு முன்பாக பரிசுத்த தேவனின் நாமம் மகிமைப்படும்படியான ஆராதனைகள் நடைபெறுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.

கர்த்தருடைய சிநேகிதனே!

தியானம்: 2019 செப்டம்பர் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 15:10-17

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் (யாத்.33:11).

‘கர்த்தர் என்னோடே பேசினார்’ என்று பலர் சொல்வது உண்டு. இதைக்கேட்டு, தங்களுடன் தேவன் பேசவில்லை என்று சிலர் குழப்பமடைவதுண்டு. ‘இவர் தேவ குரலைக்கேட்டவர்’ என்று ஊழியரை மிக ஆச்சரியத்துடன் பார்ப்பதுமுண்டு. ஒருநாள் ஒரு தாயார், தான் முதன்முதலாக கர்த்தருடைய குரலைக் கேட்டதாகச் சொன்னார். அதில், “குறிப்பிட்ட ஜெபக்குழு பரிசுத்தமற்றது, அது வனாந்தரத்திலே அழிந்துபோன மோசேயையும் இஸ்ரவேலரையும் போன்றது, அதிலே இனிமேல் நீ பங்குபெற வேண்டாம்” என்று அந்தக் குரல் சொன்னதாக அவர் கூறியபோது, நான் விழித்துக்கொண்டேன்.

கர்த்தர் அன்றும் இன்றும் பேசுகிறவர்; இது சத்தியம். ஆனால் அவர் தம் வார்த்தைக்குப் புறம்பாகப் பேசுகிறவர் அல்ல. இன்னொருவரை வேதனைப்படுத்திக் குறைசொல்லி அநியாயம் பேசுகிறவர் அல்ல. நித்தமும் அவருடைய வார்த்தையை நாம் வாசித்துத் தியானிக்கும்போது அவர் நம்மோடு பேசுகிறார். அவர் நமது உணர்வுகளுடன் பேசுகிறார். வார்த்தைக்கூடாகப் பேசுகிறார். அன்றாட சம்பவங்களுக்கூடாகப் பேசுகிறார். அன்று மோசேயுடன் தேவன் முகமுகமாய் பேசினார். அது ஒரு பிரத்தியேகமான அனுபவம். மோசே பரிசுத்தவான் என்பதால் தேவன் பேசவில்லை. தேவன் மோசேயைத் தெரிந்தெடுத்திருந்தார். மோசேயும் முழு மனதோடு தேவனையே நம்பி அவரையே சார்ந்திருந்தார். அன்று தேவனைக் கிட்டிச்சேரவே பயப்பட்ட இஸ்ரவேலர் நடுவிலே மோசேக்குக் கிடைத்த தேவனுடைய சிநேகிதம் மோசேக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம்! அதற்காக மோசே தன்னை உயர்த்தியதாகவோ, பெருமை பேசியதாக எங்கும் எழுதப்படவில்லை. அதே தேவன் இன்றும் நம்முடன் பேசுகிறார்.

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் அவருடைய ‘சிநேகிதர்’ என்ற பாக்கியம் பெற்றிருக்கிறோம். அப்படியிருக்க, அவர் நம்மோடு பேசுவாரா என்ற சந்தேகம் எதற்கு? அவரது சத்தத்தைக் கேட்கவேண்டுமானால் அவர் பாதம் நாம் காத்திருக்கவேண்டும். மோசேயைப்போல, நாமும் மெய்யாகவே ஆண்டவரை நம்பி, அவருக்கே கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். அந்தப் பற்றுதல் நம்மிடம் உண்டா? தேவன் ஒரு நண்பனைப்போல பேசுகிறவர். நாம் பேசுவதையும் கேட்கிறவர். ஆனால் இதைக்குறித்து அடுத்தவருக்குச் சொல்லும்போது, அவர்கள் நம்மை மேன்மையாகக் கருதாதபடிக்கும், நமது அறிக்கையால் மற்றவர்கள் குழம்பிவிடாதபடிக்கும் கவனம் அவசியம்.

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது. மகிமையுள்ள தேவன் முழங்குகிறார் (சங். 29:3).

ஜெபம்: மோசேயோடு முகமுகமாய் பேசின ஆண்டவரே, நீர் எங்களோடு பேசும் உம்முடைய சத்தத்தை நாங்கள் கேட்க, உம்முடைய பாதத்திலே அமர்ந்து காத்திருக்கிறோம். எங்களுக்கு உம்முடைய கிருபைகளைத் தாரும். ஆமென்.