வாக்குத்தத்தம்: 2019 செப்டம்பர் 1 ஞாயிறு

நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் (சங். 32:8).


அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவா.1:14).
சங்கீதம் 139-144 | 1 கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 1 ஞாயிறு

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (சங்.57:2).


அல்லேலூயா, என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி (சங்.146:1) இம்மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் இந்நாளின் திருவிருந்து ஆராதனையில் அவனவன் தன்தன் சுய கிரியையைச் சோதித்துப் பார்த்தவர்களாக பங்குபெற்று கர்த்தருக்கு மகிமையான ஜீவியம் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.

ஒரே வாஞ்சை

தியானம்: 2019 செப்டம்பர் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 27:1-14

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் (சங். 27:4).

அவசரமாக கட்டிலைவிட்டு எழுந்த தினேஷ், அவசரமாய் புறப்பட ஆயத்தமானான். எங்கே இந்த காலையில் என்று கேட்ட அம்மாவிடம், “நீங்களாவது என்னை எழுப்பியிருக்கலாமே. இன்று ஆராதனை வேளை நான்தானே நடத்த வேண்டும். பிந்திவிட்டதே” என்று எரிந்து விழுந்தான். அம்மா சிரித்துக்கொண்டே, “மகன், இன்றைக்கு சனிக்கிழமை” என்றார். நாம் ஏன் ஆலயத்துக்குப்போகிறோம்? ஞாயிறு தினம் என்பதாலா? ஏதாவது நாம் பங்கெடுப்பதாலா? அல்லது நல்ல பிரசங்கியார் ஒருவர் வருகிறார் என்றா? ஆராதனை என்பது தேவனுக்குரியது; அவரை மகிமைப் படுத்துவதற்கானது. ஆகவே நமது நோக்கத்தைச் சரி செய்வது நல்லது.

அன்று தாவீது கர்த்தரிடம் கேட்டதெல்லாம் ஒன்றேயொன்றுதான். “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” இதுதான் தாவீதின் முதன்மையான ஒரே விருப்பமாயிருந்தது. இங்கே ஆலயம் என்று அவர் குறிப்பிட்டது, தான் கிபியோனில் கட்டிய ஆசரிப்புக்கூடாரத்தைக் கருதினாரோ, அல்லது அவரது இருதயத்துக்குள் இருந்த கட்டப்போகின்ற ஆலயத்தைக் கருதினாரோ என்பது தெரியாவிட்டாலும், ஒன்று நிச்சயம். அவர் தன் ஜீவிய காலம் முழுவதும் தேவ பிரசன்னத்திலே வாழுவதையே வாஞ்சித்தார். இன்னொரு இடத்திலே, “முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே, இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது” (சங்.42:4) என்று ஆலயத்திற்குப் போக முடியாத நிலையில் தேவபிரசன்னத்தை நினைத்து மனம் கலங்குவதைக் காண்கிறோம்.

பல உயிராபத்துக்களை சந்திக்க நேரிட்டும், தாவீதுக்கு இருந்த ஒரே வாஞ்சை தேவ சமுகத்தில் வாழவேண்டும் என்பதுதான். அருமையானவர்களே, இன்று நம்முடைய ஒரே வாஞ்சை எது? இது ஞாயிறு ஆராதனையுடன் முடிகின்ற விஷயம் அல்ல. இது வாழ்நாள் சம்பந்தப்பட்டது. இன்று, விசுவாசிகள் என்று சொல்லுகிற அநேகரிடம் இந்த உயரிய வாஞ்சை இல்லையே! ஆலயம் வெறும் கட்டடம்தான். ஆனால், தேவ பிள்ளைகள் ஒன்றுகூடும் இடம் எவ்வளவு மகிமையானது! தேவபிரசன்னம் எத்தனை மேன்மையானது. ஆகவே, நமது மனநோக்கை, வாஞ்சையைச் சரிசெய்துகொள்வோம்.

கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன் (சங். 26:8).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, மகிமை தங்கிய தேவசமுகத்தை வாஞ்சையோடே தேடி ஆனந்தசத்தத்தோடே உம்மை ஆராதித்திட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

விசுவாசத்தில் உறுதி

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: எபிரெயர் 11:1-40


வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகியபோது கல்லறையினிடத்தில் வந்து… (மாற்கு 16:2).


விசுவாசம் என்பது எப்பொழுதும் தனித்து செல்லும் வீரனல்ல. சில வேளைகளில் விசுவாசத்துடன் பயமும் இணைந்திருக்கும். விசுவாசம் வினாக்கள் எழுப்பாமல் இருப்பதல்ல; மாறாக கேள்விகளின் மத்தியிலும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். விசுவாசம் அனைத்துக்கும் விடையளிக்காது; ஆனால் அசாதாரண சூழ்நிலைகளிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அதன் கிரியைகள் அமைந்திருக்கும்.

வாசனையற்ற, ருசியற்ற, நிறமற்ற ஆக்ஸிஜனையும், ஹைடிரஜனையும், கரையாத, கறுப்பான, ருசியற்ற கார்பன் என்பதுடன் இணைத்து தேவன் எவ்வாறு அழகான வெள்ளை நிறமுடைய இனிப்பான சர்க்கரையாக மாற்றுகிறார் என்பதை நம்மால் முழுவதும் அறிந்து கொள்ளமுடியாது. அதைப் போன்றே தேவனுடைய செயல்களுக்கான அனைத்துக் காரணங்களும் நமக்குத் தெரியாவிட்டாலும், நம்முடைய அனைத்து சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவன் தரும் விளைவை நாம் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையான விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1). பனிமூட்டத்தின் வழியே நம்மால் எதையும் காண இயலாவிட்டாலும் தேவனை நம்புவதே விசுவாசமாகும்.

ஈஸ்டர் ஞாயிறு காலையில் மகத லேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவரும் ஒரு விசுவாசப் பணியை மேற்கொண்டார்கள். இயேசுவின் சரீரத்தைச் சுகந்தவர்க்கமிட தங்களுக்குள் உடன்படிக்கையிட்டு அதற்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள். ஆனால் அதனை சனிக்கிழமை மாலை வரை அவர்களால் செய்யக்கூடாமற் போயிற்று. ஓய்வு நாள் முடிந்தபின் அவைகளை வாங்கிக்கொண்டு யோசேப்பின் கல்லறைக்கு வந்து ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தை மரியாதை செய்ய நினைத்திருந்தனர்.

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது அவர்கள் கல்லறையினிடத்தில் வந்தார்கள் (மாற்கு16:2). சூரிய உதயத்துக்கு முன்னர் இருட்டோடே தாங்கள் வாங்கிய பொருட்களுடன் எருசலேம் நகர வீதிகளைக் கடந்து வந்திருந்தனர். கல்லறை இருந்த தோட்டத்துக்குள் வந்தவுடன் மிகப் பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்த கல்லறைக்குள் எப்படி செல்வது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் காணப்படும் விசு வாசத்துக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் காணப்படுகிறது. இப்பெண்களால் அக்கல்லைப் புரட்ட இயலாது என்பது தெளிவு. அதற்காக அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து அதற்கான திட்டங்களைத் தீட்டவில்லை. அப்பிரச்சனையை ஆராய ஒரு குழுவையும் அமைக்கவில்லை. தங்களுடைய விசுவாசத்துடன் அன்பான கரிசனையுடன் அக்கல்லறைக்கு அவர்கள் வந்தனர்.

நியூபெளண்ட்லாந்து கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்தது. அது ஒரு புதன் கிழமை மாலை. கப்பலின் தலைவன் 24 மணி நேரத்துக்கும் மேலாக தனது அறையிலேயே செய்வதறியாது இருந்தார். அப்பொழுது அவருடைய தோளை ஒருவர் தட்டவும் திரும்பிப் பார்த்த தலைவர் அங்கு விசுவாச ஜெப வீரரான ஜார்ஜ் முல்லரைக் கண்டார். “கேப்டன், நான் சனிக்கிழமை மதியம் கியூபெக் நகரில் இருக்கவேண்டும்” என்று கூறினார். “அது இயலாத காரியம்” என்று அச்சத்துடனும் திகைப்புடனும் கேப்டன் கூறினார்.

அதிக அடர்த்தியான மூடுபனி இருப்பதால் கப்பலை வேகமாக செலுத்த இயலாததால் சரியான வேளையில் கரை சேரமுடியாது என்பதை உணர்ந்த கேப்டன் “ நான் உதவியற்ற நிலையில் இருக்கிறேன்” என்று முணுமுணுத்தார்.

விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லர் “நாம் வரைபட அறைக்குச் சென்று ஜெபிப்போம்” என்று ஆலோசனை கூறினார். “சூழ்நிலையைமட்டுமே உணர்ந்த அக்கப்பலின் கேப்டன், இந்த பனி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார். இல்லை என்று பதிலளித்த முல்லர் “என் கண்கள் இந்த பனியின்மீது அல்ல; என் வாழ்வின் சகல சூழ்நிலைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜீவனுள்ள தேவன் மேலேயே உள்ளது” என்றார். இருவரும் ஜெபிப்பதற்கு கீழே இறங்கிச் சென்றனர். முல்லர் முழங்காற்படியிட்டு ஜெபித்தார். சில நிமிடங்களில் அந்த பனி விலகியது; கப்பலும் விரைந்து சென்றது. முல்லர் சனிக்கிழமைக்கு முன்னரே கியூபெக் சென்று சேர்ந்துவிட்டார்.

நாமும் விசுவாச வாழ்க்கை வாழ வேண்டுமெனில், கல்லறையை மூடியிருக்கும் கல்லைவிட்டு நம்முடைய கண்களை அகற்றி, அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை நோக்க வேண்டும். அக்கல்லறையின் கல் தங்களுக்குத் தடையாக இருக்கும் என அப்பெண்கள் அறிந்திருந்தும் சுகந்த வர்க்கமிட தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அதிகாலமே தங்களை ஆயத்தமாக்கிக்கொண்டு, இருளில் அக்கல்லறைத் தோட்டத்துக்கு வந்தனர்.

விசுவாசம் என்பது வினா எழுப்பாது என்பதல்ல; தேவனுடைய வல்லமைக்கு முழுதும் நம்மை ஒப்புவிப்பதாகும்.

அன்பானவர்களே, இன்று உங்களுடைய விசுவாசத்தை எப்படி நீங்கள் செயலில் காட்டுவீர்கள்?

அதிகாலைப் பாடல்:

ஒப்பற்ற பூரண கிருபையே,
பெலவீன என் இருதயத்தை எழுப்பட்டும்.
எனக்காக நீர் மரித்தீரே;
என் அன்பும் உண்மையாகவும் மாறாததாகவும்
உமக்காக எரிந்து பிரகாசிக்கட்டும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர்-அக்டோபர் 2019)

[01]
தாங்கள் மாதந்தோறும் அனுப்பும் சத்தியவசன பத்திரிக்கைகள் எனக்கு தவறாமல் கிடைக்கின்றன. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகத்திலுள்ள அட்டவணைப்படி இவ்வாண்டும் வேதத்தை அனுதினமும் வாசித்து வருகிறேன். எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs.Sarojini Moses, Dohnavur.


[02]
Dear Brother in Christ, I am immesnely delighted to meditate on the Biblical verses given in ‘Anuthinamum Christhuvudan’. The authors of the morning devotion have been inspired by the Holy Spirit and so we reap spiritual growth and maturity . I am very much grateful to the Lord and your Ministry in Christ because you have dedicated yourself for the service of the Lord Jesus. Your publication ‘Sathiyavasanam’ abounds with deep and penetrating spiritual wisdom. This spiritual Magazine is also useful for strengthening and renewing my spiritual life. I regularly pray for your Ministry.

Mr.P.Vincent, Srivilliputhur.


[03]
சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய மாதப் பத்திரிக்கையை தொடர்ந்து பெற்றுவருகிறோம். தியானபுத்தகம் தின தியான வாசிப்பிற்கு மிகப் பிரயோஜனமாக உள்ளது.

Mrs.Jebamani George, Tirunelveli.


[04]
சத்தியவசன புத்தகங்கள் ஒழுங்காக கிடைக்கிறது. புத்தகங்கள் அனைத்தும் எங்களது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் சத்தியவசன ஊழியங்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக!

Mrs.Regina Manickam, Palayamkottai.


[05]
சத்தியவசன புத்தகங்கள் எனக்கு தவறாமல் கிடைக்கிறது. தினமும் வேதப் பகுதி வாசிப்பதற்கு முன்பதாக, அனுதினமும் கிறிஸ்துவுடன் அன்றையப் பகுதியைத் தவறாது வாசிப்பவர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு பகுதியும் ஆழ்ந்த கருத்துடன் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பொருத்தமான உதாரணத்துடன் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான ஜெபம் வழிகாட்டியாக உள்ளது. தேவனுடைய ராஜ்யம் புத்தகமும் கிடைத்தது. தங்கள் பத்திரிக்கை ஊழியங்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Mr.R.S.A.Sundersing, Tirunelveli.


[06]
Dear Brother in Christ, I am receiving your Magazine regularly and I am reading Anuthinamum Christhuvudan daily. May God bless your Ministry.

Mrs.Dr.Smilee Vivian, Davangere.

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை நீதியின் பாதையில் நடத்துகிற நல்ல மேய்ப்பனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகள், தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், மற்றும் Whatsapp/SMS ஆகியவற்றின் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவன் தந்துள்ள ஆதரவாளர்களுக்காக (Sponsors) அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

ஈரோட்டில் அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சி.எஸ்.ஐ., பிரப் தேவாலாய Parish Hall இல் சத்தியவசன விசுவாச பங்காளர் கூடுகையையும் 27ஆம் தேதி ஞாயிறு காலை பிரப் ஆலய ஆராதனையில் முன்னேற்ற பணியையும் ஒழுங்கு செய்துள்ளோம். இது தொடர்பான மேலதிகமான விவரங்களையும் அழைப்பிதழையும் ஈரோட்டிலுள்ள பங்காளர்களுக்கு அனுப்பிவைப்போம். இக் கூட்டங்கள் சிறப்பாய் நடைபெற தங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் நீலகிரி மாவட்டத்திலும் மழையினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவிலிருந்து மக்கள் மீட்கப்படவும் மீண்டும் அந்த இடங்களில் பேராபத்து வராதபடிக்கும் தேவனிடம் மன்றாடுவோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தேவசமுகத்தில் காத்திருத்தல், தேவசித்தத்தோடு இணைந்து சுவிசேஷப்பணியில் நமது பங்கு போன்ற பல காரியங்களை தியானிக்கும் வண்ணம் செப்டம்பர் மாதத்தில் தியானங்களை எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் கர்த்தருடைய நாமங்களை தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்கள் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் ஊன்ற கட்டுகிறதாயும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்