ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 30 திங்கள்
பழங்குடிமக்கள், ஆதிவாசிமக்கள் மத்தியில் சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்துவரும் மிஷனரிகளுக்காகவும், மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், பணித்தளங்களில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள், வன்முறைகளில் கர்த்தர் ஊழியர்களை வேலியடைத்து பாதுகாக்கவும், அங்கு செயல்பட்டுவரும் ஜெபக்குழுக்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
இயேசுவின் ஜெபம்
தியானம்: 2026 மார்ச் 30 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 17:1-5

… நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்; (யோவான் 17:4).
இந்த அதிகாரத்தில் இயேசு செய்த நீண்ட ஜெபத்தை யோவான் பதிவு செய்துள்ளார். இயேசு தனிமையாகவும் பிறருக்காகவும் ஜெபித்த ஜெபங்களை சுவிசேஷங்களில் காணலாம். ஆனால், இது விசேஷித்ததும், முழுமையாகத் தரப்பட்டுள்ளதுமான ஜெபம். இந்த முழு ஜெபத்தையும் முழு இருதயத்துடன் கவனித்தால், சாத்தானின் வல்லமைக்கு உட்பட்ட சக்திகளுக்கும், தேவனுடைய அதிகாரத்துக்கு உட்பட்டவர்களுக்குமிடையே நடைபெறுகின்ற ஒரு யுத்த களமாகவே இந்த உலகம் விளங்குகிறது என்பதை இந்த ஜெபம் உணர்த்துகிறது. அதற்காக நாம் கலங்கவேண்டியதில்லை. ஏனெனில், இந்தப் போராட்டத்தில் தேவன் தமது பிள்ளைகளை சாத்தானின் வல்லமையிலிருந்து விலக்கி, பாதுகாத்து, பரிசுத்தப்படுத்தி, சத்தியத்தில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென்று இயேசு பாரத்துடன் ஜெபிக்கிறதைக் காண்கிறோம். தமது வேளை வந்துவிட்டதை உணர்ந்தும், நமது ஆண்டவர் தமக்காக ஜெபிக்காமல் நமக்காக ஜெபித்தாரே, இந்தச் செயல் நமது இருதயத்தை உடைக்காதோ!
இந்த ஜெபத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கலாம். முதற் பகுதியில் இரு முக்கிய விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். முதலாவது, நித்திய ஜீவன். நித்திய நித்தியமாக வாழுவதுதான் நித்திய ஜீவன் என்றுதான் நாம் எண்ணுவதுண்டு. அது சரிதான். ஆனால், “மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று இயேசு தெள்ளத்தெளிவாக அறிக்கை செய்வதைக் கவனிக்கவும். ஆம், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரே வழி குமாரன் இயேசுவினூடாக பிதாவை அறிவதேயாகும். நித்திய ஜீவனை அடைவதற்கான ஒரே தேவை கிறிஸ்துவுக்குள் தேவனுடனான உறவே அல்லாமல் வேறேதுவு மில்லை. நமது பாவங்களை விட்டு இயேசுவிடம் திரும்பும்போது பரிசுத்தாவியானவர் நமக்குள் வாசம்பண்ணி நம்மை நேர்பாதையில் நடத்தி, பிதாவினிடத்தில் சேர்ப்பார்.
அடுத்ததாக, மகிமைப்படுத்துதல். தேவனுடைய மகிமை என்பது அவருடைய குணாதிசயமும், பிரசன்னமுமாகும், ஆனால், மகிமைப்படுத்துதல் ஒரு செயற்பாடு. “பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்” என்று ஜெபித்த ஆண்டவர் எப்படி அதைச் செய்து முடித்தார்? “நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.” இதுதான் மகிமைப்படுத்துதல். வெறுமனே பாடுவதில் ஜெபிப்பதில் அல்ல; நமக்காக தேவன் அநாதியாய் குறித்திருக்கிற தேவதிட்டத்தை அறிந்து, அதை இப்பூமியில் நிறைவேற்றி முடிப்பதே தேவனை மகிமைப்படுத்துவதாகும். நாம் மெய்யாகவே தேவனை நமது வாழ்விற்கூடாக மகிமைப்படுத்துகிறோமா?
ஜெபம்: தேவனே, நீர் தந்த வாழ்நாட்களிலே எங்களுக்கு நீர் வைத்த திட்டங்களை நிறை வேற்றி முடிக்கவும் உம்மைமட்டுமே மகிமைப்படுத்தவும் கிருபை செய்யும். ஆமென்.