வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 1 ஞாயிறு

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் (யோவான் 3:3).

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் … தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். (சங்.92:13)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 1 ஞாயிறு

அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்; இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார் (ஏசா 58:9).

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா.58:11) என்ற வாக்குப்படியே இம்மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் இன்றைய ஆராதனையில் விசுவாசிகளாகிய கூட்டத்தார் ஒரேமனமும் ஒரே இருதயமுள்ளவர்களாய் கூடி ஆராதிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.

ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார்

தியானம்: 2026 மார்ச் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 4:1-11

YouTube video

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத்.4:1).

இம்மானுவேலராய் நம்மோடுகூட இருந்து வழிநடத்தின தேவாதிதேவன் இந்தப் புதியமாதத்திற்குள் பிரவேசிக்க உதவி செய்தபடியால் கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவோம். உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்க காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24) குறைவுகளை நிறைவாக்குகிற கர்த்தர்தாமே நமக்கு வேண்டிய புதிய கிருபைகளைத் தந்து வழிநடத்துவாராக.

ஒருமுறை கிறிஸ்துமஸ் ஆராதனை முடிந்து வீடு திரும்பியபோது, எனது சிறிய மகள், “இன்னும் மூன்று மாதத்தில் ஈஸ்டர் வந்துவிடும்தானே” என்றாள். அந்த வயதில் அவளுக்கு என்ன புரிந்திருக்குமோ தெரியாது; ஆனால், அவள் கவனித்ததைக் கொண்டு இப்படி ஒரு அறிக்கையை விடுத்தாள். இது பொய்யல்ல. இந்த லெந்து நாட்களிலாகிலும் நமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரவேண்டுமென்று வாஞ்சிப்போமாக.

லெந்து நாட்களில், ஆண்டவரின் நாற்பது நாட்கள் உபவாச காலங்களை கூடுதலாக நினைத்துப் பார்ப்பதுண்டு. வாழ்க்கையிலே பிரச்சனைகள் வந்து விட்டால் உபவாசித்து நாம் ஜெபிப்போம் என்று எண்ணுவதுண்டு. ஒருமுறை இயேசுவிடம் சீடர்கள் வந்து, தங்களால் ஏன் பிசாசைத் துரத்த முடியாமற் போயிற்று என கேட்டனர். இயேசுவோ, “இவ்விதமான பிசாசுகளை ஜெபத்தினாலும், உபவா சத்தினாலுமேயன்றி துரத்த முடியாது” என்கிறார். இதை கருத்திற் கொண்டு சிலர் அதிக சோதனை வரும்போது, இது பொல்லாத பிசாசின் தந்திரமே; இதை விரட்ட உபவாசிக்கவே வேண்டும் என்று உபவாசிப்பதுண்டு. இவைகள் எல்லாமே நல்ல காரியங்கள்தான். உபவாசிப்பது எப்போதும் நமது சரீரத்தை ஒடுக்கி ஆவியை உற்சாகப்படுத்தி தேவனோடுள்ள உறவில் வளரச்செய்யும். ஆனால் இன்றைய தியானப்பகுதி, இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்கென்றே ஆவியானவர் அவரை வனாந்தரத்துக்குக் கொண்டு சென்றார் என்பதைக் கூறுகிறது. ஆண்டவர் நாற்பது நாட்கள் இரவும் பகலும் புசியாது உபவாசத்தில் இருந்தார். அதன் பின்னர் அவருக்குப் பசியுண்டானபோது, அங்கே உணவு கிடைக்கவில்லை. பதிலாக சோதனைக்காரன் வந்து நின்றான் என்று காண்கிறோம். அவருக்கு உண்டான பசியைக்கொண்டே தனது முதலாவது சோதனையை அவரை நோக்கி அவிழ்த்து விடுகிறான். ஆண்டவரும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டே அவனுக்குப் பதிலளித்தார். இயேசுவானவர் தமது பணியை ஆரம்பிக்கும் முன்பதாக, ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றது மாத்திரமல்ல, பிசாசையும் அவனது சோதனைகளையும் ஜெயித்தவராகவே தமது ஊழியத்தை ஆரம்பித்தார்.

நாமும் கூட தேவனுடைய அபிஷேகத்தை மட்டும் பெற்றுக்கொண்டால் போதாது; நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிசாசானவனையும் ஜெயித்து ஜீவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஜெபம்: கர்த்தாவே, இந்த லெந்து நாட்கள் வெறும் பட்டினியிருக்கும் உபவாச நாட்களாக மாத்திரம் இராமல் ஆண்டவரோடு நெருங்கிச் சேரும் நாட்களாக வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சுமந்து தீர்த்த” இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துவின் பாடுமரணங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்த தியானங்கள் அனைவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை கர்த்தர் நாம மகிமைக்காக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தியானபுத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

நமது தேசத்துக்காகவும், மே மாதத்திற்குள்ளாக தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந் தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்கி.22:30). திறப்பிலே நின்று தேசத்தில் கர்த்தருக்கு பயந்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு சுபிட்சமடைய கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

மார்ச் 1-28 மற்றும் ஏப்ரல் 18 -30 ஆகிய நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் லெந்து நாட்களுக்கான தியானங்களாகவும், கர்த்தருக்குப் பயப்படுதலைக் குறித்தும் எழுதியுள்ளார்கள். மார்ச் 29-31, ஏப்ரல் மாதம் 1-17 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், பின்பு அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்ததையும் தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

நமது மேய்ப்பர்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 23

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்.23:1)
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் (வெளி.7:17).

நாம் நன்கு அறிந்த இந்த வார்த்தைகளை தாவீது எழுதியபோது, அவர் தன்னைப் பற்றியும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்துள்ள அனைவரையும் பற்றி தைரியமாக அறிக்கை செய்தார்.

நாமும் “கர்த்தர் என் மேய்ப்பர்”; என்ற அறிக்கையை நேர்மையுடன் சொல்ல இயலுமா? நாம் வழிதவறி அலைந்தோம். அவனவன் தன்தன் வழியிலே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் (ஏசாயா 53:6). ஆனால், இயேசு நம்மைக் கண்டுபிடித்ததால் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறோம். கிறிஸ்துவை நம்புவதற்கு முன்பு, “நாம் காணாமற்போயிருந்த ஆடுகள்.” “நம் அனைவரையும் தமது மந்தையின் ஒரு பகுதியாக மாற்றினார்.” அவர் மாத்திரமே நமது மேய்ப்பர். ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு தங்களை ‘ஆடுகள்’ என்று அழைப்பது சங்கடமாக உள்ளது. ஏனெனில், ஆடுகள் பாதுகாப்பற்றவை, அவைகளுக்குக் கண்பார்வை குறைவு, எனவே பாதை தெரியாது அலைந்து திரியும் வாய்ப்புகள் அதிகம். எனினும் வேதாகமம் நம்மை குதிரைகளுக்கோ, சிங்கங்களுக்கோ ஒப்பிடவில்லை. ஆடுகள் என்றே அழைக்கிறது. எனவே, நமக்கு ஒரு மேய்ப்பன் தேவை. “கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவதும் அவன் அதிகாரத்தில் இல்லை” (எரே. 10:23). இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இயேசு நம்முடைய மேய்ப்பராக இருந்தால் நாம் அவருடைய குரலை அறிந்துகொள்ள வேண்டும்; அது மாத்திரமல்ல, அவருக்கு செவிகொடுக்க வேண்டும். அவரது ஆடுகள் அவர் சத்தத்துக்கு செவி கொடுக்கின்றன என்று மூன்று முறை யோவான் 10ம் அதிகாரத்தில் (வச. 3,16,27) இயேசு கூறியுள்ளார். அது மாத்திரமல்ல, கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களின் குரலையும் அவருடைய ஆடுகள் இனங்கண்டு கொள்வார்கள். பொய்யான போதகர்களின் குரல்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் (வச.5). பாவங்கள் நிறைந்த உலகில் நல்லமேய்ப்பரின் குரல் அவருடைய ஆடுகளை வாழ்விக்கிறது. நல்லமேய்ப்பரின் குரல் என்பது தேவனுடைய வார்த்தையே. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (1 யோவான் 4:1-6). உங்கள் மேய்ப்பரை அறிந்துகொள்ளுங்கள்; அவருடன் நேரத்தை செலவிடுங்கள், சத்தியத்தை தியானியுங்கள். அவருடைய வார்த்தையைப் படிப்பதால் மட்டுமே அவருடைய குரலை நாம் இனம் காணமுடியும் (எபே.4:21).

நல்லமேய்ப்பன் நம்மை போஷித்து, தம்முடைய வார்த்தையின்படி நம்மை வழிநடத்துகிறார். வேதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து அறிந்து, அதன்படி நடக்கவேண்டும். அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதால் ஆடுகள் அவரைப் பின்பற்றுகின்றன (யோவான் 10:4) “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்; (யாக். 1:22).” நாம் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்கீதம் 23 அழகாகக் கூறுகிறது. அவ்வாறு இல்லையெனில் அவர் நமக்காக திட்டமிட்டுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும். பசுமையான புல்வெளிகள், தெளிவான நீரோடை, மந்தையின் கூட்டுறவு, இரவில் பாதுகாப்பு, நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும் அபிஷேகம் மற்றும் இன்னும் பலவற்றை நமக்காக அவர் வைத்துள்ளார்.

அவர் நமது மேய்ப்பராக இருந்தால் அவருக்கு மந்தைகளாகிய நாம் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். மந்தைகள் பால், கம்பளி, இறைச்சி, ஆட்டுக்குட்டிகள் மற்றும் வருடாந்தர விருந்துகள் இவைகளால் மேய்ப்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பயன்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்காக பலிகளாகவும் உதவின. யூத மேய்ப்பர் தங்கள் ஆடுகளை நோக்கமின்றி கொல்லவில்லை. ஏனெனில், ஆன்மா மிகவும் மதிப்புடையது. எனவே கர்த்தருக்குக் காணிக்கையாக தங்களிடமிருந்த சிறப்பானதைக் கொடுத்தார்கள். இறைவனின் பிள்ளைகளாகிய நாம் “ஜீவனுள்ள பலிகளாக இருக்கவேண்டும்; (ரோமர்12:1,2),” அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவேண்டும். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களை இரட்சகரிடம் கொண்டு வரவேண்டும். நம்மை அவருடைய ஆடுகளாக மாற்றியதற்கு அவர் செலுத்தின கிரயத்தை கருத்தில் கொண்டு, நம்முடைய அனைத்தையும், சிறந்ததையும் அவருக்குக் கொடுக்கவேண்டும்.

இறுதியாக நாம் அவருடைய ஆடுகளாக இருந்தால் மாத்திரமே, பரலோகத்திற்குச் செல்லமுடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்; (சங். 23:6).” “என் பிதாவின் வீட்டில் அநேக மாளிகைகள் உள்ளன. உங்களுக்காக ஓர் இடத்தை ஆயத்தம் பண்ண நான் செல்கிறேன்” (யோவான் 14:1-3) என்று இயேசு சொன்னார். நாம் பரலோகம் சென்றாலும் அங்கும் நமது மேய்ப்பர் நம்மை கவனித்துக்கொள்வார். கர்த்தர் நமது மேய்ப்பர் என்று நமது வாயினால் மாத்திரம் சொல்வது சரியல்ல. நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தால் அவருடைய ஜனங்களை வாங்கினதால் “என் ஆடுகள்” என்று அழைக்கிறார். நாமும் அவரை நம்புவதால் “நமது மேய்ப்பர்” என்று சொல்லுகிறோம்.

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி.7:17).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.உட்ரோ குரோல்

ஜெரோம் லத்தீன் வில்கேட் வேதாக மத்தை மொழிபெயர்த்தவர். இன்று உலகெங்கும் உள்ள ரோமர் கத்தோலிக்கர்களால் பயன்படுத்தப்படும் வேதாகமம் இதுவே. இவர் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கக்கூடாது. அவற்றுக்கு அதற்குத் தகுதியில்லை என்றார். ஆனால், ரோமாபுரியில் இருந்த ரோமர் கத்தோலிக்க பிஷப்புகள் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

கி.பி.முதல் நான்கு நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட வேதாகம நூல்களுடன் இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப்படவில்லை.

1546இல் டிரெண்டில் நடந்த ரோமன் கத்தோலிக்கர்களின் மாநாட்டில், இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் வேதாகம நூல்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, அவர்களுக்காக அச்சிடப்பட்ட வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் நடுவே இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த வேதாகமத்தைச் சீர்திருத்த மரபினரோ, வேறு சபைப்பிரிவினரோ ஏற்றுக்கொள்வதில்லை.

66 புத்தகங்கள் புனித நூல்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இவையனைத் தும் ஆதித்திருச்சபையினரால் தேவனுடைய ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டுள்ளவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புனித நூல்களும் நாம் வேதாகமம் என்று அழைக்கும் நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டு நூல்கள் யாவும் கி.மு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டன.

கி.பி.397 இல் கார்த்தேஜ் என்னும் இடத்தில் நடைபெற்ற மூன்றாம் கிறிஸ்தவ மாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களும் புனிதமானவை, வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளத் தகுதியானவை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த நூற்றாண்டிலேயே வேதாகமத்தில் சேர்க்கப்பட வேண்டிய 66 பரிசுத்த நூல்களும் தெரிந்தெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. அந்த நாள் முதல் வேதாகமத்தில் எதுவும் கூட்டப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

நாம் ஒரு காரியத்தை நினைவுகூர வேண்டும்.

வேதாகமம் அதிகாரபூர்வமான ஒரு புத்தகத் தொகுதி அல்ல.

வேதாகமம் அதிகாரபூர்வமான புத்தகங்களின் ஒரு தொகுதியாகும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மனிதர் சொல்லுவதால் அது அப்படி ஆக்கப்பட்டதல்ல. வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அப்படிக் கூறுகிறார்கள்.

கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலகமாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களையும், தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று தீர்மானித்தார்கள். அங்கீகரித்தார்கள். அதனால்தான் அந்த 27 புத்தகங்களும் தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை. இதை எந்த மாநாடு கூடி அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அவை அப்படியே இருக்கும். அவற்றுக்கு மனிதனுடைய சான்றிதழ் தேவையில்லை. ஆவியினால் தூண்டப்பட்டதால் தான் கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலக மாநாட்டினர் இந்த 27 புத்தகங்களும் ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று கூறினர்.

கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை நாம் முழு நம்பிக்கையுடன் வாசிக்கலாம். நாம் அதில் தேவனுடைய உள்ளத்தை வாசிக்கிறோம். தேவனுடைய உள்ளமும், சித்தமும் மனுக்குலத்துக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பனை செய்து பாருங்கள்! உங்களுக்கு தேவனுடைய வார்த்தை நேரடியாகக் கிடைக்கிறது. தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள். தேவன் தம் வசனத்தின் மூலம் உங்களுடனே பேசுகிறார்.

பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

இவை யார் கூறியது?

உங்களுடைய தலையில், மூளையில் இதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். உலகமெங்கும் அதை விதைப்பாயாக!

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2