ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 28 சனி
அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8) நம்பிக்கையின் தேவன் எல்லாவித சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நம்மை நிரப்பி இம்மாதத்தில் நம்மை குறையில்லாமல் நடத்தினார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டை களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் (சங். 30 :11).
இளைப்படையார்!
தியானம்: 2026 பிப்ரவரி 28 சனி | வேத வாசிப்பு: ஏசாயா 40:18-31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ … ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் (பிரசங்கி 40:31).
பொதுவாகக் கழுகுகள் வயதுசென்று பெலவீனமடையும்போது, மிகவும் உயரமான மலைகளிலே சென்று உட்கார்ந்து, தனது இறகுகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பிடுங்கிப்போட்டு, வெறும் தோலோடு காணப்படுமாம். சிறிது காலம் செல்ல புதிய இறகுகளெல்லாம் மீண்டும் முளைக்க ஆரம்பிக்கும்; அப்போது அந்தக் கழுகு மீண்டும் புது பெலனடைந்த கழுகாய் மாறி, சிறகடித்து உயரப் பறக்குமாம். இதுபோலவே கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களும், புது பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்றும், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்துள்ளார். பொதுவாக நமது சரீரம் ஓடினால் இளைப்படையும், நடந்தால் சோர்ந்துபோகும். ஆனால் ஆவியோ உற்சாகமுள்ளது. அது கர்த்தருக்குக் காத்திருக்கும்போது, இளைப்படையாது, சோர்வடையாது. ஆவி உற்சாகமாய் இருக்கும்போது, மாம்சமும் உற்சாகமாய் இருக்கும்.
இதற்கு முந்தின வசனங்களில் சொல்லப்பட்டிருப்பதென்ன? “என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்” என்று தேவன் கேட்கிறார். “வார்க்கப்பட்ட சொரூபத்துக்கும், தட்டான் செய்யும் உருவத்துக்கும் ஒப்பிடுவீர்களோ? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த அநாதி தேவனாகிய நான் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை, இதை நீ அறியாயோ” என்கிறார். இப்படிப்பட்ட தேவனிடத்தில் நாம் காத்திருக்கும்போது நாமும் அப்படியே இளைப்படையோம். நாம் எப்போதும் பறக்கிறவர்களாயும், ஓடுகிறவர்களாயும், நடக்கிறவர்களாயும் இருப்போம். ஆனால் முதலாவது சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டதுபோல கர்த்தருக்குப் புறம்பானவர்களோ, துன்மார்க்கரின் ஆலோசனையில் நடப்பவர்களாகவும், பாவிகளின் வழியில் நிற்கிறவர்களாகவும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காருகிறவர்களாயும் இருப்பார்கள். அவர்கள் இளைப்படைந்து நடந்து, நின்று, உட்கார்ந்து விடுவார்கள். நாம் எப்படி? பறந்து ஓடி நடக்கிறவர்களாய் இருக்கப்போகிறோமா? அல்லது நடந்து, நின்று, உட்காரப் போகிறோமா?
நாம் காத்திருக்கும் தேவன் இளைப்படையாதவராய், உறுதியானவராய் இருக்கும் போது நாமும் அவரின் சாயலைத் தரித்தவர்களாய் உறுதியாக நிற்கப் பிரயாசப்படுவோம். கர்த்தரின் பிள்ளைகளுக்கு நித்திய இளைப்பாறுதலைத் தவிர வேறு இளைப்பாறுதல் இல்லை. ஆனால் அவர்கள் சோர்வடையார்கள். இளைப்படையார்கள் என்பதுதான் உண்மை. சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன்கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா 40:29).
ஜெபம்: “எங்களைப் பெலப்படுத்துகிற கர்த்தாவே, சோர்ந்துபோன வேளையிலும், பெலனற்ற நேரத்திலும் உன்னத பெலத்தால் எங்களை நிரப்பி திடப்படுத்துகிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.”
வாக்குத்தத்தம்: 2026 பிப்ரவரி 27 வெள்ளி
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் … நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். (வெளி. 3:15)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 10,11 | மாலை: மாற்கு 6:32-56
ஜெபக்குறிப்பு: 2026 பிப்ரவரி 27 வெள்ளி
பயப்படாதிருங்கள்; திடன்கொள்ளுங்கள் (ஏசா.35:4) பலவித சோர்வுகளினாலும், மனக் கவலைகளினாலும், துன்பதுயரங்களோடு பலநாட்களாக ஜெபித்தும் ஏற்ற தீர்வு கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது வாழ்விலும் வழியும் சத்தியமுமாகிய தேவன் இடைபட்டு அவர்களை திடப்படுத்தவும், தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி வழிநடத்த ஜெபிப்போம்.
தாங்கும் தேவன்!
தியானம்: 2026 பிப்ரவரி 27 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 46:1-13

உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன் நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசாயா 46:4).
நான்கு வயதிலே தாயைப் பறிகொடுத்து, சிறிய தாயோடு, தனது ஆறு சகோதரங்களுக்கும் ஒரு நல்ல அக்காவாக இருந்து, வரும் பிரச்சனைகளையெல்லாம் சமாளித்துவந்தாள் ஒரு பெண். பின்னர் அவள் திருமணம் முடித்து, ஐந்து பிள்ளைகளுக்குத் தாயானாள். தனது 55 வயதில் கணவரையும் இழந்து, விதவையானாள். அதன் பின்னர் தனியாக தனது வாழ்க்கைப் பயணத்தில், பிள்ளைகளையெல்லாம் உருவாக்கி, அவர்களுக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து, பேரக்குழந்தைகள், பூட்டக்குழந்தைகள் என்றெல்லாம் கண்டுகளித்தார். பின்னர் வயது சென்று, சரீரத்தின் பெலன் குன்றிப்போய் தனது 96 வது பிறந்த நாளை படுக்கையில் இருந்த வண்ணம் நினைவுகூரும்போது, அவர்கள் தனது வாயினால் அறிக்கையிட்ட சாட்சி என்னவெனில், இவ்வளவு காலங்களையும் நான் எப்படிக் கடந்துவந்தேன் என்று நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே அது அதிசயமாய் இருக்கிறது. என்னோடுகூட கர்த்தரின் வழிநடத்துதல் இருந்தது; அதுவே இதற்குக் காரணமாய் இருக்கிறது என்றார். இத்தாயாருடைய பிறந்தநாளுக்கு மேற்குறிப்பிட்ட வசனத்தையே, ஒரு சகோதரி வாழ்த்தாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
இங்கே இஸ்ரவேல் சந்ததியாரைப் பார்த்துக் கர்த்தர் சொல்லுகிறார்: தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் வயிற்றில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன். இனிமேலும் அப்படிச் செய்வேன், தாங்குவேன், சுமப்பேன், தப்புவிப்பேன். எப்படிப்பட்டதான ஒரு வாக்குத்தத்தம். கர்த்தரே எம்மைச் சுமக்கிறவராய், தப்புவிக்கிறவராய், தாங்குகிறவராய் இருக்கிறார். அவர் உயிருள்ள தேவனாய் இருக்கிறார்.
“யாருக்கு என்னைச் சமானமாக்குவீர்கள்” என்று கர்த்தர் கேட்கிறார். தங்கள் கையில் இருக்கும் பொன்னைக் கொட்டி, ஒரு தெய்வத்தை உருவாக்கி, அதைப் பணிந்து, அதை தோளின்மேல் சுமந்து, அதன் ஸ்தானத்தில் வைக்கிறார்கள். அது பேசாமல் அவ் இடத்திலேயே நிற்கும், அசையாது, யாராவது கூப்பிட்டால் மறு உத்தரவு கொடுக்காது, அவர்கள் இக்கட்டை நீக்காது, இரட்சிக்கவும் மாட்டாது. அவர்களை அது சுமக்காது. அவர்கள்தான் அதைச் சுமந்து செல்லவேண்டும். நாம் எப்படிப்பட்ட ஒரு தெய்வத்தை ஆராதனை செய்கிறோம். நம்மைச் சுமப்பவரையா? அல்லது நாம் சுமப்பதையா? நம் தேவன் மரணத்தை வென்று உயிரோடே எழும்பியவர். இன்றும் நமக்காக அனைத்தையும் செய்ய வல்லமையுள்ளவர். மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (வெளி.1:18).
ஜெபம்: இந்தநாள் வரை எங்களை சுமந்து வருபவரே, நாங்கள் தோன்றுமுன்னே எங்களுக்கு பேரிட்டு, எங்களை தாங்கி, ஏந்தி தப்புவித்துவருகிறீர். உமக்கே எல்லாத் துதியையும் ஏறெடுக்கிறோம். ஆமென்.