வாக்குத்தத்தம்: 2026 ஜனவரி 31 சனி

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர். அவருடைய நியாயந்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். (சங். 105:7)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 22,23 | மாலை: மத்தேயு 22:1-22

ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 31 சனி

இம்மாதத்தின் இறுதிநாள்வரை நம்மை சுகபத்திரமாய் பாதுகாத்து ஒரு குறைவுமில்லாமல் நடத்தின தேவாதி தேவனை ஸ்தோத்திரிப்போம். புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கும்முன்பதாக நம்மைநாமே ஆராய்ந்து நமது வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம்.

பலாத்காரம் வேண்டாம்!

தியானம்: 2026 ஜனவரி 31 சனி | வேத வாசிப்பு: யோவான் 18:1-13

YouTube video

வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்கிரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை (மத்தேயு 12:19).

குறைவுகள் அதிகமின்றி, அமைதலாய் வாழும்வரை, நமக்குள்ளிருந்து புறப்படும் குணாதிசயங்கள் எவ்வளவுக்கு உண்மையாயிருக்கும்? அந்த அமைதியின் மத்தியில் ஒரு சிறு கல் விழுந்தால் போதும், அப்போதுதான் நமது உண்மை நிலைமை வெளிவரும். அமைதியும் பெருந்தன்மையும் இளகிய மனமும் உள்ள ஒருவர் என்று நாம் பெயரெடுக்கலாம். ஆனால் நாம் அநியாயமாகக் குற்றப்படுத்தப்படும்போது, அல்லது தவறாகப் பேசப்படும்போது என்ன செய்கிறோம்? நம்மை நியாயப்படுத்த எத்தனை பாடுபடுகிறோம்! ஆத்திரப்படுகிறோம்! வாக்குவாதம் செய்கிறோம். நமது சத்தம் எடுபடாவிட்டால், சத்தம் போட்டுப் பேசி, சாட்சிகளையும் ஆதரவுகளையும்கூட தேடுகிறோம்! ஒரு ஆவிக்குரியவனுக்கு இது தகுமா? இங்கேதான் நமது உண்மையான குணாதிசயம் வெளிப்படும். நாம் காட்டும் பிரதிபலிப்புகூட மற்றவர்களை பாதிக்கக்கூடியவை. ஏன் நாம் இதைக் குறித்து சிந்திப்பதில்லை. இது ஆண்டவருக்குரிய குணாதிசயம் அல்ல.

இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்றனர் மார்க்க தலைவர்கள். மதி மயங்கியவர், புத்திதடுமாறியவர் என்றனர் குடும்பத்தார். ஜனங்களை வஞ்சிக்கிறவர் என்றனர் ஜனங்கள். அத்தோடு ஓய்வுநாளையும் யூத பாரம்பரியங்களை மதிக்காதவர், 46 வருடங்களாகக் கட்டிய ஆலயத்தை இடித்து, மூன்றே நாளில் கட்டி முடிப்பேன் என்று தேவதூஷணம் சொன்னவர் என்றெல்லாம் சொன்னார்கள். இத்தனைக்கும் ஆண்டவர் தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப் பாடுபட்டாரா? ஆத்திரப்பட்டு தமது வார்த்தைகளைக் கொட்டினாரா? பலாத்காரம் செய்தாரா? மாறாக, பலவேளைகளில் அவர் அமைதலாய் பதிலளித்தார். பலவேளைகளில் அந்த இடத்தைவிட்டே கடந்து போனார். கெத்சமனேயிலே தம்மையே ஒப்புக்கொடுத்தார். ஆத்திரமடைந்து காதை வெட்டிய பேதுருவை அடக்கினார். இயேசு தமக்கு எதிராக எழுந்த எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்புக் காட்டவுமில்லை. பலாத்காரத்தைப் பிரயோகிக்கவுமில்லை.

இப்படியிருக்க நமது காரியம் என்ன? நமக்கு நேரிடுகின்ற அவமானங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? சோதனைகளும் நிந்தைகளும் நேரிடும் வேளைகள்தான் நமக்கு நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்கான உகந்த தருணங்கள். ஆத்திரம் கோபம் பாவம்; ஆகவே, அவை நமக்குள் இருந்து வெடித்து வெளிவரும்போது, ஆவியானவர் துணையை நாடி அவற்றை அடக்கி, சொஸ்தமாவதை நாடுவோமாக. அவர் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு முன்செல்லும்போது, இன்னொரு தடவை நாம் சோதிக்கப்படும்போது, நமக்குள்ளான வளர்ச்சியை நாமே கண்டுகொள்ளலாம். கிறிஸ்துவின் ஒப்பற்ற பண்பை நானும் கற்றுக்கொள்ளலாம்.

ஜெபம்: கர்த்தாவே, நீர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்து நியாயமாய் தீர்ப்பு செய்கிறவருக்கு ஒப்புவித்த அந்த சிந்தையை எங்களுக்குக் கிருபையாய் தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2026 ஜனவரி 30 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்ற பணியாளர்களையும், பிரதிநிதிகளையும், மொழியாக்கங்களில் உதவி செய்யும் சகோதர, சகோதரிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து, வரும்நாட்களிலும் கர்த்தர் தமது வல்ல கரத்தில் எடுத்து உபயோகிக்க மன்றாடுவோம்.

தற்புகழ்ச்சி வேண்டாம்!

தியானம்: 2026 ஜனவரி 30 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 12:9-16

YouTube video

தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார் (மத்தேயு 12:16).

ஒரு மண்டபத்திலே ஏராளமான மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “மாணிக்கம் ஐயா, மாணிக்கம்தான். அவர் நல்லாயிருக்கணும்” என்ற பேச்சுத்தான் மண்டபத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு இளைஞன் இவர் யார் என்று அறியும் ஆவலோடு உள்ளே போனான். அங்கே, “ஒரு வாய் சோற்றுக்கு இந்த ஊர்மக்கள் என்னிடம் எப்படியாய் ஏமாந்து விட்டார்கள். இன்றைக்கு நானே பெரியவன். இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்” என்று மாணிக்கம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆம், மக்கள் ஒருவேளை பசி ஆறவேண்டும் என்று அல்ல; தனது பெயர் பிரசித்தமாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே மாணிக்கம் இந்தக் காரியத்தைச் செய்தார். இப்படியே தமது பெயர் பிரபல்யமாகவேண்டும் என்பதற்காகவே பல குறுக்கு வழிகளைக் கையாளுகிற அநேகர் உண்டு. இது இயேசு போதித்த வழி அல்ல.

நான்குபேர் போற்றவேண்டுமென்று யார்தான் விரும்பமாட்டார்கள்? அதே சமயம் போற்றக்கூடாது என்பதற்காக நன்மை செய்யாமல் இருக்கலாமா? அல்லது தீமைதான் செய்யலாமா? ஆனால், ஆண்டவருடைய வாழ்க்கை வித்தியாசமானதாயிருந்தது. அவர் மக்களுக்குச் செய்த நன்மைகளை வேறு யார் செய்வார்? ஆனால், எந்தவிதத்திலும் தம்முடைய பெயர் பிரபல்யம் அடைவதை இயேசு விரும்பவில்லை. ஜெபஆலயத்தில் இருந்த சூம்பிய கையையுடையவனுக்கு இயேசு சுகம் கொடுத்ததைக் கேள்வியுற்று அநேகர் அவரைப் பின்பற்றி வந்தார்கள். அவர்களுடைய தேவைகளைச் சந்தித்த இயேசுவானவர், தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி கண்டிப்பாகக் கட்டளையிட்டார். மாற்கு இந்த சம்பவத்தை அசுத்த ஆவிகளும், இவரைத் தேவகுமாரன் என்று சத்தமிட்டுச் சொன்னபோது, இயேசு அசுத்த ஆவிகளுக்குக்கூட தம்மை பிரசித்தம் பண்ண வேண்டாமென்று கட்டளையிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எழுதுகின்றார். ஏன்? மக்களும், பிசாசும் நினைத்திருந்தபடி அல்ல; தேவ ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவுமே கிறிஸ்து உலகிற்கு வந்தார். ஒரு ராஜ்யத்தை அமைக்கவோ மக்களை ஆளவோ அல்ல; அவர்களை தேவ ராஜ்யத்தின் புத்திரராக ஆக்கவென்றே அவர் வந்தார். எல்லாவற்றிலும் தாம் அல்ல; பிதாவே மகிமைப்படவேண்டும் என்பதில் இயேசு கவனமாக இருந்தார்.

இன்று அநேகர் இயேசுவின் நாமத்தைச் சொல்லி தமக்குக் கனத்தைச் சம்பாதிப்பதைக் காண்கிறோம். அது தவறு. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமக்கல்ல, நன்மை செய்ய நம்மை அழைத்த தேவனுக்கே மகிமையைக் கொண்டுவரவேண்டும். நமக்குரிய கனம் தேவனிடமிருந்து வரட்டும். அதுதான் நமக்கு நல்லது. தற்புகழ்ச்சியை நாடாமல் எப்போதும் நான் அப்பிரயோஜனமுள்ள ஊழியன் என்று சொல்லக் கற்றுக்கொள்வோமாக!

ஜெபம்: தேவனே, உமது நாமத்தினாலே நாங்கள் செய்யும் நற்காரியங்களினால் எல்லா நாமத்திற்கும் மேலான உம்முடைய பரிசுத்த நாமம் மாத்திரம் கனப்படுத்தப்பட எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.