ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வெள்ளி

“என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லி கையெடுப்பேன்” (சங்.63:4) என்ற ஜெபத்தைப்போலவே ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னும் நாமத்தால் நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்…

மீண்டும் வனையும் கர்த்தாவே!

தியானம்: ஜுன் 30 வெள்ளி; வேத வாசிப்பு: ஏசாயா 43:1-23

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்.” ஏசாயா 43:21

“என் மகன் என் பெயரைப் பெருமைப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவனோ அதைக் கெடுத்துப்போட்டான். ஆனாலும் அவன் என் மகன். நான் அவனைத் திரும்பவும் தூக்கியெடுத்து, என் பெயர் சொல்லும் பாத்திரமாக மாற்றுவேன்” என்று ஒரு தகப்பன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

தமது நாமத்தைப் பூமியிலே மகிமைப்படுத்தி, தமது துதியைச் சொல்லுவார்கள் என்றுதான் கர்த்தர் இஸ்ரவேலர்களை அழைத்தார். எகிப்திலிருந்து அவர்களை அத்தனை அதிசயமாக மீட்டெடுத்து, வழிநெடுகே மற்ற ராஜாக்கள் இவர்களுக்குப் பயப்படுமளவுக்கு இவர்களிடம் பராக்கிரமமான காரியங்களைச் செய்தார். கானானில் அவர்களைக் குடியமர்த்தியதை முழு உலகமும் அன்று கண்டு வியந்தது. ஆனால், அவர்கள் வழிவிலகியதால், மறுபடியும் பாபிலோனின் சிறைப்பிடித்தலுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த 43ம் அதிகாரத்தில் மீண்டும் ஒரு யாத்திரையைக் குறித்து ஏசாயா முன்னுரைப்பதை நாம் காணலாம். “நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்” (ஏசாயா 43:7) என்றார் கர்த்தர். “என் ஜனத்தை நான் மறுபடியும் கொண்டுவருவேன். அவர்கள் எனக்கென்று ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” என்றும் உறுதியளித்தார்.

கர்த்தர் இஸ்ரவேலை அழுகையின் பாத்திரமாக அல்ல; துதியின் பாத்திரமாகவே உருவாக்கியிருந்தார். அந்தத் துதி அவர்கள் வாயில் மறைந்துபோக அவர்களே காரணராயினர். அவர்கள் கெட்டுப்போன களிமண்போல ஆயினர். ஆனாலும் கர்த்தர் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. மறுபடியும் அவர்களை வனையும்படி சித்தம்கொண்டார். பாபிலோனிலிருந்து மீண்டும் அழைத்துவந்து, தமக்கேற்றதாக வனைவதாக உறுதி கூறினார்.

தேவன் நம்மை வீணாய் அழைக்கவில்லை. தமக்குச் சாட்சியாகவும், தமது துதியை இந்த உலகில் கூறி அறிவிப்போம் என்று நம்பியே, தமது பிள்ளைகள் என்ற உரிமையை நமக்குத் தந்திருக்கிறார். நாமோ இந்த உலகத்தின் அசூசிகளுடன் கலந்து கெட்டுப்போன களிமண் ஆனோம். ஆனாலும், தேவன் இன்று நமக்கு ஒரு நம்பிக்கை தருகிறார். அவர் நம்மை மறுபடியும் புதுப்பிக்க, தமக்கு உகந்த பாத்திரமாக, தேவனுடைய துதியைச் சொல்லும் பாத்திரமாக வனைய ஆயத்தமாயிருக்கிறார். அவர் கைகளில் நம்மைத்தர நாம் ஆயத்தமா? “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங்கீதம் 34:1).

ஜெபம்: அன்பின் தேவனே, நான் உம்முடைய சித்தத்தினுள் வாழவும், என் வாயில் என்றும் துதி மங்காத பாத்திரமாக மீண்டும் வனையும்படியும் உமது கரத்தில் களிமண்ணாக என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.